எவை எவை அறத்தின்பாற்படும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஒரு ஹதீதைப் பின்வரும் அழகுப்பாவில் வடித்துத் தருகிறார் புலவர் காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் (1888-1975). மர்ஹூம் அப்துற்-றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து…
***
சோதரன் முகத்தை நோக்கித்
தூயபுன் முறுவல் பூத்தல்;
தொல்லறம் புரியத் தூண்டல்;
தொடர்பவம் விலக்கல்; செல்லும்
பாதையை விட்டுத் தப்பிப்
பருவரல் அடைந்து நிற்போர்
பார்க்கின், நேர்வழியைக் காட்டி
பரிந்(து) அவர்க் குதவி செய்தல்;
ஓதரும் பார்வை நீங்கி
உழலுவோர்க் குதவல்; எனபோ(டு)
உறுத்தகல், முள்ளைப் பாதை
யூடுநின் றகற்றல்; உன்றன்
சீதநீர்க் கடகால் நின்று
சிறி(து) உடன் பிறந்தாற்(கு) ஊற்றல்;
செப்பிய இவையா வும்நீ
செய்தகு தருமம் ஆமே.
***
ஒ.நூருல் அமீன் said,
19/08/2012 இல் 21:24
நற்குணத்தை சம்பூரணபடுத்தவே இறைவன் என்னை துதாராக்கினான் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்).
இந்த கவிதை அந்த நபிமொழியை ஞாபகமூட்டியது. நன்றி!
உலகெங்கும் மனித நேயம் ஓங்க இந்த ஈகைத் திருநாளில் அல்லாஹ்-பிரமன்-கர்த்தர் என பல பெயரில் அழைக்கப்படும் ஏகப்பரம்பொருளை இறைஞ்சுவோமாக!
அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.