ஆனந்த விகடனில்தான் அப்படியொரு அட்டகாசமான பொழிப்புரையை பார்த்து மிகவும் ரசித்திருக்கிறேன். ‘குதுர கர்ணா’ என்கிற பெயரில் ஒரு நண்பர் மெட்ராஸ் பாஷையில் விளையாடியிருப்பார். இப்போது கூகுளில் தேடியபோதுதான் அது திரு. லதானந்த் என்று தெரிந்து கொண்டேன். அநியாயமாக தமாஷ் செய்கிறார் இந்த காட்டிலாக்கா அதிகாரி. ரகளையான பதிவுகள். மனம் லேசாக அங்கே போகலாம். சரி, ‘குதுர கர்ணா’ வுக்குப் பிறகு புறப்பட்டு வருகிறார் ‘காமெடி கிங்’ கய்யும். செய்யும்! சிரிக்கத் தெரியாத தமிழ்ப்பற்றாளர்கள் சிலரின் கண்கள் உறுத்தியதால் லதானந்த் அப்போது தொடர முடியவில்லையாம். கய்யுமிற்கு என்ன நேருமென்று பார்க்கலாம். அட, சிரிங்க சார்.. ‘Laughter is my message. I do not ask you to do prayer. I ask you to find moments, situations, in which you can laugh whole-heartedly. Your laughter will open a thousand and one roses within you’ என்கிறான் ஓஷோ.
ஒரு சந்தேகம், மெட்ராஸ் பாஷை என்கிற ‘சென்னை செந்தமிழ்’கூட ஓரளவு எல்லோருக்கும் புரியும். நாகூர் பாஷை அப்படியா? சகோதரி அமரந்தா நாகூர் வந்திருந்தபோது ‘வாங்க அக்கா’ என்றாள் என் ‘படிச்ச’ தங்கச்சி. மறப்புக்கு அந்தப் பக்கம் ‘கெக்கெக்கே’ என்று சிரிப்பு சத்தம். மச்சிதான் அப்படி சிரித்தாள். ‘லாத்தாவை போயி அக்காண்டு கூப்புடுறாஹா!’ என்று விழுந்து விழுந்து சிரித்தாள். பாருங்க, இஹ அஹலை வெடைக்கிறாஹா!
நண்பர் கய்யும் அனுப்பிய சில பொழிப்புரைகளை கீழே தந்திருக்கிறேன். விரைவில் அவர் ‘கிறளோவியம்’ எழுதவும் வாழ்த்துகிறேன். மாமேதை வள்ளுவன் என்னை மன்னிப்பானாக. இங்கே ஒரு செய்தி. திருவள்ளுவர் ஒரு நபிதான் என்று அழுத்தமாக வாதிடுவார் இஜட். ஜபருல்லா. தன்னை விமர்சித்தாலும் சிரிக்கும் நபி சிறந்த நபியாகத்தான் இருக்க முடியும். வான் புகழ் வள்ளுவன் வாழ்க!
***
நாகூர் பாஷையில் குறள்களுக்கு உரை!
அப்துல் கய்யும்
“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு நாகூர் பஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது.
இதேபோன்று குறள்களுக்கு நாகூர் பாஷையிலேயே பதவுரை எழுதினால் என்ன என்ற ஒரு விபரீத ஆசை எனக்கு தோன்றியிருக்கக் கூடாதுதான். என்ன செய்வது? திருவள்ளுவர் என்னை மாப்பு செய்வாராக.
(பிகு. பரிமேலழகர், மு.வ., சாலமன் பாப்பையா, மு.க. இவர்கள்தான் விளக்கவுரை எழுத வேண்டுமா? நாம எழுதக்கூடாதா? நாகூர் ரூமியிடம் கேட்டுப் பாருங்கள். யாராவது பதிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்களா என்று. “நாகூர் பாஷையில் திருக்குறளுக்கு பதவுரை” என்று ஒரு புத்தகம் போட்டு விடலாம். நான் ரெடிப்பா.)
***
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
கைலி அவுந்து உலும்போது கை எப்படி கப்புன்னு புடிச்சுக்குதோ அதுமாதிரி கூட்டாளி முசீபத்துலே இருக்கும்போது உளுந்தடிச்சு போயி கூடமாட ஒத்தாசை செய்யிணும்.
*
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அரபு பாஷைக்கு அலீஃப் எழுத்து எப்படியோ அதுமாதிரி அல்லாஹுத்தாலாதான் இந்த துனியாவுக்கு எல்லாமே.
*
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
அஹ எஹல பாக்கும்போது, எஹ அஹல பாக்கும்போது பேச்சு மூச்சு இரிக்காது
*
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்
பச்சப்புள்ளெ மதலை பேச்சை கேக்காதஹத்தான் பீப்பீ சத்தம்தான் அலஹா இருக்கு, புல்புல்தாரா சத்தம் அலஹா இருக்குன்னு சொல்லுவாஹா.
*
மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
புள்ளெ வாப்பாவுக்கு செய்யிற உதவி என்னான்னு சொன்னா ‘இவனைப் பெத்ததுக்கு அஹ ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்’னு சொல்றமாதிரி அவன் நடந்துக்கணும்.
*
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
வந்த விருந்தாடி ஜனங்களுக்கு பணியான் பண்டம் வச்சுக் கொடுத்து, வேற யாராச்சும் வர்ராஹலான்னு வாசக்கதவெ பார்த்துக்கிட்டு இருந்தா அஹலுக்காகா மலாயக்கத்துமாருவ மஹ்ஷர்ருலே காத்துக்கிட்டு இருப்பாஹா.
*
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
ஏழைப்பட்ட ஜனங்களெ எல்லாரும் ஏசுவாஹா. காசுபணம் இருக்குறஹலெ தலையிலே தூக்கிவச்சுக்கிட்டு ஆடுவாஹா.
*
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
ஓதுங்க. (சாபு சொல்ற மாதிரி) நல்லா ஓதுங்க. ஓதி முடிச்சப்பொறவு அதுக்கு தகுந்தமாதிரி அதபு அந்தீஸா நடந்துக்குங்க.
*
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
யார் பிஸாது செஞ்சாலும் அஹ ஹக்கா பேசுறாஹலான்னு விசாரிச்ச பொறவுதான் எதையும் முடிவு பண்ணனும்.
*
யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
வாயை அடக்கி பேசுங்கனி. இல்லாட்டி பலா கர்மம் கொண்டு ஹயாத்தெ அளிஞ்சு போயிடுவியும்.
*
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
நல்ல அமல் செய்யிறதைக் காட்டிலும் பரக்கத் வேற ஒண்ணுமே கெடையாது. அத செய்யாமப் போனா அதைவிட பலா முசீபத்து வேற எதுவுமே கெடையாது.
*
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
நாம அஹல பாக்குறப்போ அஹ தரையை பாக்குறாஹா; நாம அஹல பாக்காதப்போ அஹ நம்மள பாத்து அஹலுக்குள்ளேயே சிரிச்சுக்குறாஹா.
*
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்
ஹவா நஃப்ஸ் புடிச்சு நாம தனியா உக்காந்து வயித்துலே கொட்டிக்கிறது, மிஸ்கீன் மாதிரி மத்தஹக்கிட்டே காசுபணம் கேக்குறதை விட மோசம்.
*
விருப்புஅறாச் சுற்றம் இயையின், அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்
ஒருத்தஹலுக்கு மொஹபத் காட்டுற சொந்தக்காரஹ மட்டும் அமைஞ்சிட்டாஹனா, அந்த சீதேவிக்கு நெறஞ்ச பரக்கத்தையும், நீடிச்ச ஸலாமத்தையும் கொடுக்கும்.
*
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்;மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
பொண்டாட்டிக்கு பயந்து நடுங்குறஹ, சாலிஹான மனுசருக்கு ஒத்தாசை செய்யக்கூட பயப்படுவாஹா.
*
யாதானும் நாமாம்ஆல்; ஊராம்ஆல் என்னொருவன்
சாம்துணையும் கல்லாத ஆறு
நாலெழுத்து படிச்சஹலுக்கு சஃபர் செஞ்ச எல்லா நாடும் அஹலோடசொந்த ஊரு மாதிரிதான். அப்படியிருந்தும் ஏன் அஹலுவோ படிக்காம இருக்குறாஹா?
*
கல்லாதான் சொல்கா முறுதல், முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்று அற்று
(மாப்புசெய்ங்க. இதுக்கு பதவுரை எழுதி “அதபு கெட்ட மனுஷன்”னு ஏச்சுபேச்சு வாங்குறதுக்கு நான் தயாரா இல்லை)
**
நன்றி : ‘நாகூரி’ அப்துல் கையும் | E-Mail : vapuchi@gmail.com
**
ஒப்பிட இரு சுட்டிகள் : http://kural.muthu.org/ & http://www.tamilnation.org/literature/kural/index.htm
சிரிக்க ஒரே ஒரு சுட்டி : எங்கும் குறள் – ஜெயமோகன்
ஜெயக்குமார் said,
08/12/2009 இல் 11:57
அப்ப பேசுறப்போ “வ” சேக்காமப் பேசுனா நாகூர் பாஷைன்னு சொல்லுங்க…
🙂
ஜெயக்குமார்
ஹமீது ஜாஃபர் said,
08/12/2009 இல் 15:57
//நாம அஹல பாக்குறப்போ அஹ தரையை பாக்குறாஹா; நாம அஹல பாக்காதப்போ அஹ நம்மள பாத்து அஹலுக்குள்ளேயே சிரிச்சுக்குறாஹா//
சில நேரங்களில் ஷிப்லி பாவா இப்படி சொல்லி வெடப்பாக ஆனா யாருக்கும் வெளங்காது, ஏனென்றால் அங்கே வந்ததெல்லாம் ஞான சூனியங்கள்.
nagoori said,
08/12/2009 இல் 20:47
இரண்டு சிறுவர்கள்……..
திருவள்ளுவர் ஒரு மிமிக்ரிமேன்னு எப்படிச் சொல்றே?
1330 குரலுக்குச் சொந்தக்காரர் ஆச்சே! அதான்டா சொன்னேன்..
ஆபிதீன் said,
09/12/2009 இல் 05:55
ஜெயக்குமார், எது சேக்காமப் போனாலும் ‘ஹ’ & ‘ஹா’ கண்டிப்பா சேக்கனும்டு நாகூர்க்காரஹ சொல்லுவாஹா!
தாஜ் said,
10/12/2009 இல் 12:28
அப்துல் கையும் இப் பணியை
தொடர வேண்டும்.
இப்படியெல்லாம் சிரித்து நாளாகிறது.
– தாஜ்
அ. முஹம்மது இஸ்மாயில் said,
10/12/2009 இல் 12:31
திருவள்ளுவர் ஜனாப்வள்ளுவர் ஆயிடுவாஹா போலிருக்கிதே
Bahrain Maraikaayar said,
17/12/2009 இல் 23:01
Supero super!!